தொடரும் நண்பர்கள்

வெள்ளி, 26 மே, 2017

“மானுட சேவையில் சாதனை புரிந்த சாதனையாளர்”


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் 
பண்புடை யாளர் தொடர்பு. - 

என்ற ஐயன் திருமொழிக்கு இலக்கணமாய் இருந்து , இளமையில் மறைந்த  எனது நண்பன் - ராமலிங்கத்திற்கு இந்த வலைப்பூவை அர்ப்பணிக்கிறேன்...



SSS  என்று செல்லமாக அழைக்கப்படும் சாந்தி சோசியல் சர்வீஸ். கோவை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது....

"மனிதகுலத்திற்கு ஆற்றும்  சேவை, கடவுளுக்கு ஆற்றும் சேவை ஆகும்" - என்பதை குறிக்கோளாக கொண்டு இந்த தொண்டு நிறுவனம் இயங்குகிறது.


அப்படி என்ன செய்கிறார்கள்...வாருங்கள் நண்பர்களே SSS பற்றி பார்ப்போம்...

கோவை ஒண்டிப்புதூர் -ஐ இருப்பிடமாக கொண்ட திரு பி.சுப்ரமணியம் என்னும் இளைஞர் – 1960 களில் தனது டிப்ளமோ படிப்பை கோவையின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான PSG பாலிடெக்னிக்-ல் படித்து முடித்து சிலவருடங்கள் அந்த நிறுவனத்திலேயே ஆசிரியராக பணி புரிகிறார். அவருக்கு இது எனது வேலை இல்லை என்ற எண்ணம் மனதில் ஓடியதின் விளைவு  1969ல் சாந்தி இன்ஜினியரிங் அண்ட் டிரேடிங் கம்பெனி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தி இயந்திரங்களுக்கு தேவையான  கியர் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிலை துவங்குகிறார்.


அப்பொழுது இந்த உலகத்துக்கு தெரியாது, தனது  தொலைநோக்கு பார்வையால் தொழில் உச்சம் தொட போகிறார்,  இந்த உலகத்தை தன்பக்கம் திருப்பப் போகிறார் என்பது.


1969 இல் துவங்க பட்ட இந்த சிறிய நிறுவனம், மிகப்பெரும் வகையில் வளர்ச்சியடைந்து, ஒரு காலகட்டதில்  கியர் உதிரிபாக உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்தது , பின்னர் உதிரிபாகத்தில் இருந்து முழுமைபெற்ற கியர் பாக்ஸ் தயாரிப்பில் இறங்கி உலகின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. 2016 ஆம்  வருடம் சுமார் 172 கோடி ரூபாய்களை விற்பனையாக பதிவு செய்துள்ளது. கியர் பாக்ஸ் தயாரிப்பில் ஜெர்மனியர்களையும், இத்தாலி நாட்டவரையும் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இன்றைக்கு கோவையில் கியர் மற்றும் கியர் பாக்ஸ்  தயாரிக்கும் நிறுவனங்கள் நிறைந்துவழிவதற்கு மூல கர்த்தாவே திரு பி.சுப்ரமணியம் தான். ஒன்று இவரிடம் வேலை பழகி வெளியில் சென்று தொழில் துவங்கி இருப்பார்கள் அல்லது இவரால் தொழில் அமைத்து கொடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இன்றைக்கும் படித்து தொழில் துவங்கும் பொறியாளர்கள், சுயமாக துவங்கி இருந்தாலும், சாந்தி கியர் என்கிற மாபெரும் நிறுவனத்தில் ஒரு சில ஆண்டுகளாவது பணியாற்றி இருப்பார்கள் அல்லது அங்கு பணிபுரிந்த திறமையான தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பார்கள்  என்பதில் சந்தேகம் இல்லை.

திரு பி. சுப்பிரமணியத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால், அன்றைய காலகட்டத்தில்  ஒரு இயந்திரத்தை வாங்கி அதன் கியர் பாக்ஸ் கெட்டுப்போய் விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் அந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தை தொடர்புகொள்கிறீர்கள், அவர்களது பதில் கியர் பாக்ஸ் வேண்டும் என்றால் மூன்று மாதங்கள் ஆகும் என்பதுதான்.

திரு பி. சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு தங்கள் நிலையை எடுத்துக்கூறி, இந்த இயந்திரம் இயங்காவிட்டால் மிகப்பெரும் நட்டம் ஏற்படும், தொழிலாளர்  வேலை இழப்பார்கள் என்றால்,  அந்த இயந்திரத்திற்கான கியர் பாக்ஸ் பத்து நாட்களில்  தயாரித்து வழங்கப்படும்,  இதுதான் திரு பி.சுப்ரமணியம்.

சமீப வருடங்களில் புகழ் பெற்ற முருகப்பா குரூப் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி தனது குடையின் கீழ் கொண்டு சென்றுள்ளது.

சரி தொழில் துவங்கினர்,  உழைத்தார்,  வளர்ந்தார்..அது ஊக்கம் உள்ளவர்கள் எல்லோரும் செய்யும் செயல்தான்,  இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

வாருங்கள் அவரது மறுபக்கத்தை பார்ப்போம்...

1996 ஆம் ஆண்டு தனது லட்சியமான சாந்தி சோசியல் சர்விஸ் (கோவை மக்களுக்கு சுருக்கமாக SSS ) என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தை தனது மனைவியார் திருமதி சாந்தி அவர்களது பெயரில் ஆரம்பிக்கிரார்.

இந்த நிறுவனம் என்ன செய்யப்போகிறது, என்பதை மிகவும் தெளிவாகவும், ஒரு தேர்ந்த தொழில்முறை வல்லுனரைப்போன்று SSS-ன்  சேவைகளை வடிவமைத்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணிகளை பார்ப்போம்...

சாந்தி பெட்ரோல் பங்க்: ( April 14th, 2005.)

2005 - இல் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மற்ற நிறுவனங்கள் வழங்க  யோசித்த சேவைகள் 2005 இல் இருந்து இன்றுவரை தொடர்ந்து வழங்குகிறார்கள்.


  •  வாகனங்களுக்கு இலவச காற்று (இந்த சேவைக்காக ஒவ்வொரு கற்று நிரப்பும் இயந்திரத்திற்கும் தனி பணியாளர் நியமிக்க பட்டுள்ளார் )
  •  நான்கு சக்கர வாகனங்களுக்கு, முன் பின் கண்ணாடிகள் இலவசமாக சுத்தம் செய்யப்படுகிறது.
  • HEADLIGHT ஸ்டிக்கர்ஸ் இலவசமாக ஓட்டுவது
  •  இரு  சக்கர வண்டிகளுக்கு ஆயில் மீதான சேவை வரி கிடையாது
  •  சுத்திகரிக்கப்பட்டகுடி தண்ணீர்
  •  மிக சுத்தமான கழிவறைகள்
  •  ஷு துடைக்கும் இலவச இயந்திரசேவை
 இது மட்டும் இல்லை,  மிக துல்லியமான, கலப்படம் அற்ற பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படுகிறது.  கோவை மாநகரின் மிகசிறந்த 

எரிபொருள்  நிரப்பும் நிறுவனமாக நாள் ஒன்றுக்கு 15000 வாகனங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது.

இந்திய அரசு உயர் பணமதிப்பு இழப்பு அறிவித்த நாட்களில் நபர் ஒருவருக்கு  ரூபாய்  2000 வரை தக்க ஆவணத்தோடு பழைய ரூபாய் நோட்டுகளை, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்து சிறந்த சேவையை ஆற்றியது.  வங்கிகளில் தங்கள் பணத்தை மாற்றுவதற்கு நாள் முழுவதும் வரிசையில் நின்றவர்களுக்கு சென்ற 15வது நிமிடம் புதிய நோட்டுகளாக மாற்றிவிட்டு போக முடித்து. இந்த சேவை இரவு ஒன்பது மணிவரை நடந்தது.

சாந்தி மருந்தகம்  - October 4th, 2006.

இந்த நிறுவனத்தின் சேவைகளை பார்ப்போம் ;

தரம் வாய்ந்த கம்பனிகளின் மருந்துகள் மட்டுமே விற்பனை செய்ய படுகிறது. அனைத்து மருந்துகளுக்கும் 15 சதவீத தள்ளுபடி , மேலும் விற்பனை வாரியான 5 சதவீதத்தை நிறுவனமே செலுத்தும். நீங்கள் தொடர்ந்து வாங்குபவர் என்றால் , உங்களுக்கு இலவசமாக தேவையான மருந்துகள் உங்கள் இல்லம் தேடிவரும். டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களுக்கு சேவை வரி கிடையாது. நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.




பரிசோதனை நிலையம் - November 22nd, 2007.

என்னென்ன பரிசோதனைகள் மற்றும் சேவைகள் இங்கு நடைபெறுகிறது என்பதையும் பார்ப்போம் ;




எக்ஸ் ரே , இசிஜி , ஸ்கேன், ரத்த பரிசோதனை, மாஸ்டர் ஹெல்த் செக்-அப் போன்றவை மற்ற மருத்துவமனைகளை விட 50 இல் இருந்து 70 சதவீதம் வரை குறைவான கட்டணத்தில் செய்யப்படுகிறது. CT   ஸ்கேன் போன்ற சேவை ரூபாய் 750 இல் இருந்து ஆரம்பிக்கிறது.

காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிவரை இந்த சேவையை பயன்படுத்த முடியும்.

சாந்தி மெடிக்கல் சென்டர்  - April 14th, 2010.

சேவை புரியவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்க பட்ட மற்றும் ஒரு நிறுவனம். என்ன சேவை செய்கிறார்கள் என்று பார்ப்போம்;

1. ஏறக்குறைய 63 மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் அதில் 36 மருத்துவர்கள் MD பட்டம் பெற்றவர்கள்.

2. மருத்துவரை சந்திப்பதற்கான ஒருமுறை பதிவு கட்டணமாக முப்பது ரூபாயும், மருத்துவருக்கான கட்டணமாக ரூபாய் முப்பதும் செலுத்தவேண்டும்.   ( 10 நாட்கள் நீங்கள் இலவசமாக மருத்துவரை பார்க்கலாம்) 


3. காலை மணி 8 இல் இருந்து மாலை 9 மணிவரை இந்த சேவை வழங்க படுகிறது.

4. இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க படுகிறது

5. இரத்த அழுத்தம் இலவசமாக சோதனை செய்யப்படுகிறது

அனைத்து துறையிலும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் . சேவை வழங்க sss தயாராக இருக்கிறது, தினசரி சராசரியாக 2500 பேர் வரை மருத்துவ உதவியை பெறுகிறார்கள்.

கோவைக்கு வாருங்கள், மருந்துகள் வாங்க உங்களை கோவைக்கு அழைக்க வில்லை மருத்துவ சேவைகளை பாருங்கள், ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்..

சாந்தி கேன்டீன் -  20th August 2010

முழுவதும் சேவை நோக்கத்தோடு செயல்படும் ஒரு நிறுவனம்.  இந்த நிறுவனத்தின் சுத்தத்தை பார்த்தால் அசந்து போவீர்கள். சென்னை சரவணபவனுக்கு நிகரான ஒரு சுத்தத்தை பார்க்கமுடியும்.

காலை 6 மணிக்கு ஆரம்பிக்கும் உணவு சேவை இரவு 9.30 மணி வரை எல்லா நாட்களிலும் செயல் படுகிறது.

இரண்டு இட்லிகளின் விலை ஐந்துரூபாய் , தோசை ஐந்துரூபாய், பூரி 2 கொண்டது பத்துருபாய் இப்படி மிக குறைந்த விலையில் தரமான, ருசியான,சுகாதாரமான உணவு சேவை .



சாப்பிட வருபவர்கள் யாராக இருந்தாலும் டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில்  சென்று சாப்பிட வேண்டும். இன்றைய மதிய சாப்பாட்டின் விலை ருபாய் 20 மட்டுமே. அளவுகிடையாது (விலை 5 ருபாய் குறைத்துவிட்டார்கள் ), சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், புளிக்குழம்புரசம், தயிர்,பொரியல், கீரை, ஊறுகாய், ,கேசரி, வடை, பாயசம், அப்பளம், வடை வாழைப்பழம்  இவை அனைத்தும் சுத்தமான தட்டுகளில் சுத்தமான மேசையில் அமர்ந்து சாப்பிடலாம்.




இட்லி, தோசை வகைகள், கிச்சடி, சாதவகைகள் , பூஸ்ட், ஹார்லிக்ஸ், பால் போன்றவையும் இரவுநேரத்தில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது, இதை தவிர மூலிகை சூப், டீ, காப்பி பழச்சாறு போன்றவையும் வழங்க படுகிறது.



இங்கு தினசரி உணவு உண்பவர்களின் எண்ணிக்கை சுமாராக 15000- தை தாண்டுகிறது.

இந்த அமுத சேவையை எப்படி பாராட்டலாம் நண்பர்களே? உங்களுக்கு வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை கோவை SSS -கு வருகைபுரிந்து உண்மையான சேவையை புரிந்து கொள்ள அழைக்கிறேன்....

சாந்தி இலவச எரிவாயு தகன மேடை :(March 16th, 2011.)

இறந்தவர்களை தகனம் செய்ய இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்கள். சேவைகள் நாம் அறிந்ததே  

Dialysis Services -16th August 2013.

'இங்கு டயாலிசிஸ் - செய்துகொள்ள ஒரு முறைக்கு 350 முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணிவரை இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதை தவிர ரத்த வாங்கி, கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விற்பனையும் மிக குறைத்த செலவில் செய்கிறார்கள். கண் பரிசோதனைக்கு ரூபாய் 30 மட்டுமே வாங்கப்படுகிறது. கண்ணாடி நீங்கள் வெளியில் வாங்கும் விலையில் 60 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்

இத்தனை சேவைகளையும் செய்யும் திரு பி. சுப்பிரமணியம் அவர்களை "மனித சேவை செம்மல்" என்று அழைத்தால் தகும் தானே..


 இப்பொழுது கூறுங்கள் திரு பி. சுப்பிரமணியம் போன்று சேவை உணர்வோடு, எத்தனை தொழில் அதிபர்கள் இருக்கிறார்கள்...? இவை வெளியில் தெரிந்து அவர் செய்த சேவை, வெளியில் தெரியாமல் பல லட்சக்கணக்கில் இன்று வரை சேவை செய்துவருகிறார்... பல கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் இலவசமாக அமைத்து கொடுத்துள்ளார்.




நேற்று  விளையாட வந்த விளையாட்டு வீரர்களுக்கு பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வாரிவழங்கப்படும்போது, இவரை போன்ற சேவையில் சாதனைபுரிந்த மனித நேயர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கலாமே?


செவ்வாய், 23 மே, 2017

அழியும் ஒரு சிறுபான்மை இனம்

தோழமைகளே நான் 1998 ஆம் வருடத்தில் இருந்து 2005 வரை இலங்கையில் பணிபுரிந்தேன். இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட வெள்ளை காரர்களை போன்ற தோற்றம் உடைய ஆண்களையும், பெண்களையும் பார்த்து இருக்கிறேன். 

அவர்கள்   சிங்களம் மற்றும் தமிழ்  மொழியில் சர்வ சாதாரணமாக பேசுவதை பார்த்து வியந்து, பார்ப்பதற்கு வெளிநாட்டினர் தோற்றத்தோடு இருக்கும் இவர்கள் எப்படி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பேசுகிறார்கள் என்ற ஐயத்தை எனது நண்பரும் இலங்கை பண்பலையின் மூத்த தொகுப்பாளரும் ஆன    கேப்டன். ஸ்ரீ கந்தகுமார் அவர்களிடம் எழுப்பினேன்.  (கேப்டன். ஸ்ரீ கந்தகுமார்  அவர்களுடன் ஆன எனது அனுபவத்தை வேறு ஒருநாள் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்)

கேப்டன் ஸ்ரீ.கந்தகுமார் - கண்ணாடி அணிந்து இருப்பவர்,
அருகில் நான் - சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இவர்களை  'பர்கர்' என்று இலங்கையில் அழைக்கிறார்கள். அவர்களது வரலாறு மிகவும் ரசிக்கத்தகுந்ததாக இருந்தது...உங்களோடு அந்த இனத்தை பற்றி பார்ப்பதற்கு நானும் தயாராகிவிட்டேன்...

16-ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தை ஐரோப்பாவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. டச்சு மொழியில் பர்க் என்றால் நகரம் என்று பொருள், இதில் இருந்து மருவி வந்த பெயர்தான்  'பர்கர்', அதாவது நகரத்தார் என்று நமது புரிதலுக்கு வைத்துக்கொள்வோம்

(பர்கர் இன பெண்கள்)

1508 இல் இருந்து 1635 ஆம் ஆண்டுவரை இலங்கையின் பெரும்பாலான நகரங்களை போர்ச்சுக்கீசியர்கள் ஆண்டு வந்துள்ளனர்.  இந்த போர்ச்சுக்கீசியர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாகவும், ராணுவ அதிகாரிகளாகவும், கப்பல் ஊழியர்களாகவும் இருந்தனர்.  அவர்களது இனத்தை சேர்ந்த பெண்கள் பயணத்தில் இடம்பெறவில்லை, எனவே  இலங்கையின் பூர்வ குடிகளான சிங்கள மற்றும் தமிழ் இனத்தவரை திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பெயர்கள்தான் டி சில்வா, பெர்னாண்டோ போன்றவை. இந்த போர்ச்சுகீசிய இனத்தில் வந்த பர்கர்கள் நிறத்தில் கருமை அதிகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு காரணம் போர்த்துகீசியர்கள் தென் இந்தியர்களை போன்று மாநிறம் கொண்டவர்களாக இருப்பதுதான். இப்படிதான் போர்ச்சுகீசிய பர்கர் இனம் இலங்கையில் உருவானது.


1635 - க்கு பிறகு டச்சுகாரர்களின் ஆதிக்கத்துக்கு இலங்கை மாறியது. - டச்சுக்காரர்கள் நிறத்தில் வெண்மையாக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு இணையாக இருப்பார்கள். இவர்களது சட்டப்படி டச்சுக்காரர்கள் இலங்கை பெண்களை திருமணம் செய்யலாம் ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களாக தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு பிறக்கும் பெண்கள் ஒரு டச்சுக்காரரை தான் திருமணம் செய்ய வேண்டும். இப்படி டச்சு பர்கர்கள் என்ற இனமும் தோன்றியது.
திருமணங்கள்


1795 க்கு பிறகு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இலங்கை வந்தவுடன், பிரிட்டிஷ் ராணுவ வீரார்களும், அரசு அலுவலர்களும், தனிப்பட்ட வியாபாரிகளும் இலங்கை நாட்டிற்கு வருகை புரிந்தார்கள்.. இந்த இனமும் பூர்வகுடிகளை  திருமணம் செய்துகொண்டு பர்கர் இனத்துக்கு வலுவூட்டியது. நமது நாட்டில் வெள்ளையர்களை பறங்கியர் என்று அழைப்பதைப்போல் பர்கர்களை அந்தகாலகட்டங்களில் பறங்கியர் என்றுதான் இலங்கையில் அழைத்துள்ளார்கள்.
இவர்களில்  போர்ச்சுகீசிய , டச்சு இனத்தவர்கள் மட்டும் இல்லை, ஏனைய ஐரோப்பிய நாடுகளான  ஐரிஷ் , ஸ்காட்லாந்து மற்றும்  பிரிட்டிஷ் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள்.  பெரும்பாலான பர்கர்கள் தங்கள் மரபு, மொழி மற்றும் மதங்களை கடைபிடிப்பவர்களாக இருக்கின்றனர்.

ஈஸ்ட் இந்தியன் கம்பனியின் பிடியில் இலங்கை போகும் வரை அவர்கள் தங்கள் மொழிகளை தடையின்றி பேசிவந்தனர், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வந்தபிறகு இந்த இனத்தை சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தை  தங்கள் மொழியாக மாற்றிக்கொண்டு பிரிட்டிஷ் அரசாங்க பணிகளில் சேர்ந்தார்கள். அவர்களது உடல் அமைப்பும், மொழியும்வழக்கங்களும் பிரிட்டிஷ்காரர்களுக்கு பிடித்துப்போக, பிரிட்டிஷ்காரர்கள் இவர்களை திருமணம் முடித்தார்கள். 


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை தன்  வசம் கொண்டுவந்த போது, நாடு திரும்பாத மற்ற ஐரோப்பிய இனத்தவர், பிரிட்டிஷ் பிரஜைகளை திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த கால கட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலை பயிரிட இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை இலங்கைக்கு கொண்டு சென்று குடியமர்த்தினார்கள்.  இவர்கள் இன்றுவரை இந்திய வம்சாவளியினர் என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். (இவர்களை பற்றியும் மற்றொரு நாள் பார்ப்போம்)

பர்கர் இனத்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களால் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணியமர்த்தப்பட்டார்கள். இவர்கள் தங்களை உற்பத்தி, தொழிலாளர் மேலாண்மை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளாக தங்களை நிலைநிறுத்தி கொண்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது மொழி மற்றும் இவர்களது கலாச்சாரம்.
காலப்போக்கில் இவர்கள் சிங்களவர்களையும், தமிழர்களையும் திருமணம் செய்துகொண்டார்கள். இன்றைய இலங்கையில் இவர்கள் 2011ஆம் வருட கணக்கெடுப்பின் படி சுமாராக 37000 பேர் உள்ளார்கள்.

இன்று வரை பார்ப்பதற்கு ஐரோப்பிய நாட்டவர்களை போன்ற தோன்றம்  கொண்டவர்கள் கூட இருக்கிறார்கள். பெரும்பாலான பர்கர்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின் பற்றுபவர்களாக தான் இருக்கிரார்கள்.

பர்கர் யூனியன் பில்டிங் – கொழும்பு

இவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் செய்த தொழில்கள் எல்லாவற்றிக்கும் துணை நின்றார்கள், அரசு அதிகாரிகளாகவும், தேயிலை தோட்ட தலைமை அதிகாரிகளாகவும், ரயில் சேவையில் பலதரப்பட்ட வேலைகளிலும், தபால், தந்தி சேவைகளிலும், அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்தார்கள்.

கால்பந்தாட்ட அணிகள் உருவாவதற்கு இவர்கள் தூண்டுகோலாக இருந்துள்ளார்கள். 1860ல் புகழ் பெற்ற சட்ட நிபுணராகவும், மருத்துவர்களாகவும், கொழும்பு மாநகர சபையின் கவுன்சிலராகவும், மேயராகவும் பணியாற்றியுள்ளனர்.  மேலும் இலங்கை விமான சேவையில் இந்த பிரிவை சேர்த்த பெண்கள் பலர் வேலைபார்த்து வருவது குறிப்பிட தக்கதாகும்.

இந்த இனத்தில் இருந்து வந்தவர்களில் நாம் அறிந்த சில பெயர்கள்

1. இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் – அஞ்செலோ மத்தியூஸ்
2. மைக்கல் வென்டாட்
3. முன்னாள் வீரர் லபோராய்

போன்றவர்கள் எல்லாம் இந்த இனத்துக்கு பெருமை சேர்ந்தவர்கள்தான்..


சில சகாப்தங்களுக்கு முன்பு இலங்கையில் தலைமை பதவிகளை அலங்கரித்த இந்த ஐரோப்பிய ஆசிய இனம் இன்று சிங்களமயமாக்கல் என்னும் கொள்கையால், நம் தமிழினம் போன்று பாதிப்பை சந்தித்து வெகுவாக எண்ணிக்கையில் குறைந்துவருகிறார்கள். ( ஆஸ்திரேலியா மற்றும் கனடா, பிரிட்டிஷ் போன்ற தேசங்களுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்) இலங்கையில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட , இந்த சிறுபான்மை இனம் விரைவில் இலங்கை நாட்டில் இருந்தும் அந்நாட்டின் அங்கிகரிக்கப்பட்ட இனங்களில் இருந்தும் மறைந்துவிடும் என்பது நமக்கு மிகவும் கவலையளிக்க கூடிய ஒரு விஷயம் தான்..

*****

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...